
மன்னார் பறயனாலங்குளம் வீதியில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பௌத்த விகாரைக்கு சிறி போதிராஜ விகாரை என்று பெயரிடப்பட்டுள்ளது. சிறிலங்கா படைத்தரப்பின் 61வது பிரிவின் தளபதி பிரிகேடியர் காரியவன்சவின் மேற்பார்வையின் கீழ் இப் படைப்பிரிவின் படையினர் இவ் விகாரையை அமைத்துள்ளனர். வன்னிப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண இவ் விகாரையையும், அங்கு புதிதாக வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையையும் திறந்து வைத்துள்ளார். மன்னார் மடுக்கரைப் பிரதேசத்தில் தற்போது சுமார் 500 வரையான சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன.
இவர்கள் ஏற்கனவே இப் பகுதியில் வசித்ததாகவும், 1985ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் அங்கிருந்து விரட்டப்பட்டதாகவும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இச் சிங்கள மக்கள் வெளியேறியதை அடுத்து கைவிடப்பட்ட பௌத்த விகாரையையே தாம் தற்போது புனரமைத்துள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு குறிப்பிட்டுள்ளது. கத்தோலிக்க மக்களின் புனிதப் பிரதேசமான மடுப்பகுதியில் சிங்களக் குடியேற்றங்கள் நிறுவப்படுவதும், புதிதாக பௌத்த வழிபாட்டுச் சின்னங்களை அமைப்பதும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது.
அதேவேளை, புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறி போதிராஜ விகாரைக்கு அண்மையில் உள்ள பறயனாலங்குளம் சந்திக்கு 1997ஆம் ஆண்டில் சப்புமல்புர என்று சிறிலங்கா அரசாங்கம் பெயரிட்டிருந்தது. சிறிலங்காவின் அப்போதைய பிரதிப் படைத்துறை அமைச்சர் ஜெனரல் அனுருத்த ரத்வத்தையே இப் பெயர் பலகையைத் திறந்து வைத்திருந்தார். தமிழர் தாயகப் பிரதேசமான வடக்குக் கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தி அப் பிரதேசங்களை சிங்கள மயப்படுத்தும் பணிகளை சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு மேற்கொண்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.