
வெலிக்கந்தைப் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பெற்று வரும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை அவர்களது உறவினர்கள் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ள ஜே.வி.பி. நாளை சனிக்கிழமை அவர்களை அங்கு அழைத்துச் செல்லவுள்ளது.
இது தொடர்பாக ஜே.வி.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்ததாவது;
எமது கட்சித் தலைவர் சோமவன்ச அமரசிங்க தலைமையில் நாம் அண்மையில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்தபோது அங்குள்ள மக்கள், வெலிக்கந்தை புனர்வாழ்வு முகாமிலுள்ள தமது உறவினர்களைப் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருமாறு எம்மிடம் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்தே நாம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு நாளை சனிக்கிழமை அவர்களை அங்கு அழைத்துச் செல்லவுள்ளோம்.
கிளிநொச்சியில் அரசாங்கம் மீள்குடியேற்றம் செய்துள்ளதாகக் கூறுகின்றது. ஆனால் அங்குள்ள மக்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தகரத்தையும் தடிகளையும் கொண்டு கொட்டில் அமைத்து வாழ்கின்றனர். எமது கிளிநொச்சி விஜயத்தின் போது அரசின் மீள்குடியேற்றம் எவ்வாறு நடைபெறுகின்றது என்பதை நாம் தெரிந்து கொண்டோம்.
இதேவேளை, புனர்வாழ்வு முகாமிலுள்ளவர்களை சனி, ஞாயிறு தினங்களிலே பார்வையிட முடியும். கிளிநொச்சியிலிருந்து வெலிக்கந்தைக்கு அவர்கள் தமது உறவுகளைப் பார்வையிட வருவதாயின் பொருட்கள் மற்றும் பயணச் செலவுக்காக குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாவுக்கு மேல் செலவாகும். அவர்களிடம் போதிய வசதியின்மையினால் போக்குவரத்து வசதியினை ஒழுங்கு செய்து தருமாறு எம்மிடம் கோரினர்.
இதன் பிரகாரமே நாளை சனிக்கிழமை அங்குள்ள மக்களை அழைத்துச் செல்லவுள்ளோம். இந்தச் சேவையை மாதம் தோறும் வழங்கவுள்ளோம்.