
காபூல்: "பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத முகாம்களை அழிக்க மேற்கத்திய நாடுகள் முன்வரவேண்டும்` என, ஆப்கன் அதிபர் ஹமீதுகர்சாய் ஆவேசமாக பேசினார். காபூலில் நிருபர்களிடம் அவர் பேசியதாவது:
பயங்கரவாதிகளுக்கான போர் ஆப்கன் நகரங்களிலோ அல்லது கிராமங்களிலோ நடக்கவில்லை; மாறாக, ஆப்கனுக்கு வெளியே (பாகிஸ்தானில் ) நடந்து வருகிறது என்பதை உலக நாடுகள் தெரிந்து கொள்வதற்கான தருணம் தற்போது ஏற்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளுக்கு புகலிடமாக விளங்கும் முகாம்கள், பயிற்சி மையங்கள் மற்றும் நிதி குவியும் மையங்களில்தான் இந்தப் போர் நடந்து வருகிறது. சர்வதேச அளவில் ஆப்கனுடன் நெருக்கமாக உள்ள மற்ற நாடுகளுக்கு பயங்கரவாதிகளை அழிக்கும் திறன் இருந்தும், அவர்களை அழிக்க அவர்களால் ஏன் முடியவில்லை? பயங்கரவாத முகாம்களை முற்றிலுமாக ஒழிக்க மேற்கத்திய நாடுகள் முன்வரவேண்டும். இவ்வாறு கர்சாய் கூறினார்.
அமெரிக்க ராணுவ ரகசியங்கள் வெளியான விவகாரத்தில், இரட்டை வேடம் போடும் பாகிஸ்தான் தொடர்பான கொள்கைகளை மேற்கத்திய நாடுகள் மறுபரிசீலனை செய்வது நல்லது என, ஆப்கன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரங்கீன் தெரிவித்திருந்த கால கட்டத்தில், கர்சாய் இவ்வாறு பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.