
கின்ஷாஷா : ஆப்ரிக்க நாடான காங்கோவில் ஆற்றில் சென்ற படகு கவிழ்ந்து மூழ்கியதில் 200 பேர் பலியாகினர். பலரை காணவில்லை. காங்கோ நாட்டின் வாமவுத் மாநிலம், பண்டந்து என்ற இடத்தில் உள்ள ஆற்றில் ஒரு படகில் 250 பேர் பயணம் செய்தனர். அவர்களில் பெரும்பாலோர் விவசாயிகள், மாணவர்கள், வர்த்தகர்கள். அளவுக்கு அதிகமானோர் நெருக்கடித்து உட்கார்ந்தும், நின்றும் பயணம் செய்தனர்.
பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்து மூழ்கியது. இந்த விபத்தில் 150 பேர் பலியானதாக காங்கோ அரசு தெரிவித்தது. ஆனால், 250 பேரில் 200 பேருக்கு மேல் பலியாகி விட்டதாகவும், மேலும் பலரை காணவில்லை என்றும் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். ‘‘விபத்தில் இருந்து உயிருடன் இன்னும் யாரையும் நாங்கள் மீட்கவில்லை. அவர்களாக எத்தனை பேர் நீந்தி உயிர் பிழைத்தனர் எனத் தெரியாது’’ என்று ஒரு வீரர் தெரிவித்தார். காங்கோ நாட்டின் மணிமா என்ற இடத்தில் ஆற்றில் மே மாதம் நடந்த படகு விபத்தில் 100 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.